செய்திகள்

ஒரு வாரமாக குடிக்க தண்ணீர் இல்லை: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2017-07-17 11:50 GMT   |   Update On 2017-07-17 11:50 GMT
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஒரு வாரமாக குடிக்க தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது எஸ்.பி.கவுண்டனூர் இங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இப்பகுதி மக்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் வசதி கிடையாது. போர்வெல் மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த தண்ணீர் வெளியூர்களுக்கும் அனுப்பப்படுவதால் எஸ்.பி.கவுண்டனூர் பகுதி மக்களுக்கு சரிவர தண்ணீர் கிடைப்பதில்லையாம்.

இதனால் பக்கத்து தோட்டத்தில் கிணற்றில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த போர்வெல் பழுதாகி விட்டதால் ஒரு வாரமாக குடிக்க தண்ணீர் வரவில்லையாம். இதையொட்டி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதை கண்டித்தும் உடனடியாக குடிநீர் வழங்க கோரியும் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் எஸ்.பி.கவுண்டனூர் பஸ் நிறுத்தத்தில் பூதப்பாடி- கருவரெட்டியூர் ரோட்டில் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காலி குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் அதிகாரிகளும் வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இதையொட்டி பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News