செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு ஒருவர் கைது

Published On 2017-07-14 22:13 IST   |   Update On 2017-07-14 22:13:00 IST
போலி ஆவணங்கள் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்:

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், கேளம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும். விஜயலட்சுமி அவரது நிலத்தை பார்க்க சென்றபோது அந்த நிலத்தை யாரோ 34 பிளாட்டுகள் போட்டு அதில் 27 பிளாட்டுகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து விஜயலட்சுமி காஞ்சீபுரம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு நில அபகரிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்–இன்ஸ்பெக்ட்ர் மாதவன் மற்றும் போலீசார் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவரான சாக்ரடீஸ் (வயது 43) என்பவர் நாகப்பட்டினம் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சாக்ரடீசை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News