செய்திகள்

தஞ்சை எண்ணை குழாயில் கசிவு: மெரினாவில் இளைஞர்கள் ‘திடீர்’ போராட்டமா? - 200 போலீசார் குவிப்பு

Published On 2017-07-01 07:01 GMT   |   Update On 2017-07-01 07:01 GMT
கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மெரினா கடற்கரையில் 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. சார்பில் 7 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பூமிக்கடியில் குழாய் மூலம் குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் கதிராமங்கலம் - கொடியாலம் சாலையில் உள்ள எண்ணெய் கிணறு அருகே வயல்வெளியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி நெல் வயல்களில் வழிந்தோடியது.


திராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து வயலில் எண்ணெய் படலமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.


இதையறிந்த பொதுமக்கள் - விவசாயிகள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து அவர்களை சமாதானம் செய்தனர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் நெருப்பை போட்டு தீ வைத்தனர்.

உடனே போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ வைத்தவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இதற்கிடையே கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மெரினா கடற்கரையில் நேற்று நள்ளிரவு முதல் கூடுதலாக 200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடையிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News