செய்திகள்
மீன்பிடிக்க செல்வதற்கு முன்பு மீனவர்கள் விசைப்படகுகளுக்கு சூடம் ஏற்றி வழிபட்டபோது எடுத்தபடம்.

தடைக்காலம் முடிந்தது: நாகை மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்

Published On 2017-06-15 12:52 IST   |   Update On 2017-06-15 12:52:00 IST
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நாகையில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நாகப்பட்டினம்:

தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த மீன்பிடி தடைக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டது.

இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்வது தடை செய்யப்பட்டது. அதேநேரம் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கச்செல்ல அனுமதிக்கப்பட்டன. தடைக் காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். நாட்டுப்படகுகள் மட்டுமே கடலுக்கு சென்று வந்ததால் மீன் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இதனால் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்தது.

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதைதொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு முன்பு நாகை கடுவையாறு மற்றும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் ஒருவாரம் தங்கி மீன்பிடிப் பதற்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவு பொருட்களை தயார் நிலையில் வைத்தனர். மேலும், மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் தேசிய கொடிகளை ஏற்றி பூஜைகள் செய்து, சூடம் ஏற்றி வழிபட்டனர்.




Similar News