பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி பெண் பலி
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கள்ளியம்புதூரை சேர்ந்தவர் கருப்பன். இவரது மனைவி சரசாள் (வயது50). சம்பவத்தன்று கருப்பன் தனது மனைவியுடன் பெருந்துறைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வண்டியை கருப்பன் ஓட்ட பின்னால சரசாள் உட்கார்ந்து வந்தார்.
புளியம்பாளையம் விஜயமங்கலம் ரோட்டில் வந்த போது கருப்பன் பின்னால் வந்த ஒரு சரக்கு வேன் எதிர்பாராத வகையில் கருப்பன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கணவன்-மனைவி இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சரசாள் நிலைமை மோசமானதால் அவரை மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரசாள் பரிதாபமாக இறந்தார். கருப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.