செய்திகள்

பெருந்துறை அருகே விபத்து: நிதி நிறுவன ஊழியர் பலி

Published On 2017-06-05 16:30 IST   |   Update On 2017-06-05 16:30:00 IST
பெருந்துறை அருகே விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சுந்தர் (வயது 31). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.

இவரும் இவரது நண்பர் பிரபுவும் (28) மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நேற்று இரவு சாப்பிட சென்றனர்.

சாப்பிட்டு விட்டு நிதி நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பைபாஸ் வழியாக சென்ற போது பின்னால் வந்த ஒரு கார் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர் பாராத விதமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சு மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். அவரது நண்பர் பிரபுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியான ஊழியர் சுந்தருக்கு நந்தினி என்ற மனைவியும், ஸ்ரீமதி (5) என்ற ஒரு மகளும், தர்‌ஷன் (2) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News