செய்திகள்

ஈரோடு முத்தம்பாளையத்தில் 15 பவுன் நகை- ரூ.50 ஆயிரம் கொள்ளை

Published On 2017-06-05 16:12 IST   |   Update On 2017-06-05 16:12:00 IST
ஈரோடு முத்தம்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

ஈரோடு:

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி-3 சேர்ந்தவர் மங்கயர்கரசி (வயது68). இவரது மகன் பரந்தாமன். இவரது மகள் காயத்ரி.

பரந்தாமன் தற்போது பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மகள் காயத்ரி திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

மங்கயர்கரசியின் கணவர் சில வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். இதனால் மங்கயர்கரசி மட்டும் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனது தம்பிக்கு வீட்டிற்கு மங்கயர்கரசி செல்வது வழக்கம்.

அதே போன்று நேற்று காலையும் மங்கயர்கரசி தனது தம்பி வீட்டிற்கு சென்று விட்டார். இரவு திரும்பி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுகுள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிகிடந்தது. பீரோ திறந்திருந்தது. பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News