செய்திகள்

ஈரோடு பெரியசேமூரில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் நில புரோக்கர் தற்கொலை

Published On 2017-06-05 16:02 IST   |   Update On 2017-06-05 16:02:00 IST
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கணவருடன் கோபித்து கொண்டு மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் மனம் உடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு பெரியசேமூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது38). இவரது மனைவி மங்களா(32). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

செந்தில்குமார் நில புரோக்கர் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் வறுமை வாட்டியது. இதனால் செந்தில்குமார் குடிப்பழக்கத்துக்கும் அடிமையானார் என்று கூறப்படுகிறது.

குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மங்களா கணவருடன் கோபித்து கொண்டு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

இதனால் செந்தில்குமார் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதே போன்று தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி(76). இவரது மனைவி இறந்து விட்டார். கருப்பசாமிக்கு 4 மகன்கள் உள்ளனர். அவர்களது பராமரிப்பில் கருப்பசாமி இருந்து வந்தார்.

கருப்பசாமிக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து கொண்டார். எனினும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரண்டு சம்பவம் குறித்தும் வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News