செய்திகள்

சென்னிமலையில் இன்று நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2017-06-04 17:41 IST   |   Update On 2017-06-04 17:41:00 IST
சென்னிமலையில் இன்று நடக்க இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை பிரேம்குமார் (வயது 17). 10ம் வகுப்பு படித்து முடித்து விட்டு டிப்ளமோ படிக்கிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த வாசுகி (18) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

வாசுகி பிளஸ்-2 முடித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இன்று அவர்களது திருமணம் சென்னிமலையில் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்தனர்.

திருமண வயதை எட்டாத 2 பேருக்கும் திருமணம் நடக்க இருக்கும் தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும், சைல்டு லைன் அமைப்புக்கும் தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு தலைமை அதிகாரி சுரேஷ், சைல்டு லைன் அமைப்பு இயக்குனர் அருண், ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ஆகியோர் சென்னிமலைக்கு சென்றனர்.

பிரேம்குமார், வாசுகி ஆகியோரின் பெற்றோரிடம் பேசினர். 2 பேரும் திருமண வயதை எட்டவில்லை. எனவே அவர்களது திருமணம் செல்லாது. மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி எச்சரித்து அறிவுரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது. பிரேம்குமார், வாசுகி ஆகியோரின் பெற்றோரிடம் எழுதியும் வாங்கினர்.

Similar News