செய்திகள்

அப்துல் ரகுமான் மறைவுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்

Published On 2017-06-03 02:02 IST   |   Update On 2017-06-03 06:22:00 IST
உடல்நலக்குறைவால் நேற்று காலமான கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

உடல்நலக்குறைவால் நேற்று காலமான கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு ரஜினிகாந்த், கமல் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

"மதிப்பிற்குரிய கவிக்கோ அப்துல் ரகுமான், ஒரு சிறந்த எழுந்தாளர், அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்". இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் "அப்துல் ரஹ்மான் உயிராய்த்தான் மாண்டார் உரமாகி கவிதை மூலம் தமிழாய் வாழ்வார். என் மூலம், எனக்கும் இறங்கல் கூறப்போகும் கவி மூலம் வாழ்ந்தே தீருவர்"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Similar News