மயிலாடுதுறையில் ரவுடி வெட்டிக் கொலை
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேச்சாவடியை சேர்ந்த அமிர்தலிங்கம் என்பவர் மகன் வெற்றி என்ற வெற்றிவேல் (வயது 30) ரவுடி. இவர் மீது மயிலாடுதுறை, பொறையாறு, செம்பனார் கோவில், குத்தாலம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் 2013-ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மயிலாடுதுறை ரேவதி நகரை சேர்ந்த லோகேஸ் என்பவரை வெற்றிவேல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று இரவு 10.30 மணியளவில் மயிலாடுதுறை எம்.ஜி.ஆர். காலனியில் வெற்றிவேல் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவரை கொலை செய்த மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெற்றிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடு துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.