செய்திகள்

நம்பியூர் அருகே நகைக்கடை கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

Published On 2017-06-01 11:13 GMT   |   Update On 2017-06-01 11:13 GMT
நம்பியூர் அருகே நகைக்கடை கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:

நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேட்டில் சரவணன் என்பவர் சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிரீல் கதவுகள் திறந்திருப்பதை பார்த்து சரவணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சரவணன் வந்து பார்த்த போது கடையின் கதவு மற்றும் கிரீல்கேட் ஆகியவற்றில் போடப்பட்டிருந்த பூட்டுகள் கல்லால் உடைக்கப்பட்டும் கதவுகளை கடப்பாரை அல்லது இரும்பு கம்பிகள் கொண்டு நெம்பி திறந்து நகைக்கடையின் உள் நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து நம்பியூர் போலீசாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடையினுள் சென்று திருடு போயுள்ள பொருட்கள் குறித்து விபரம் சேகரித்தனர்.

அதில் மோதிரம், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகள் மற்றும் கொலுசு அரணா உள்ளிட்ட சுமார் ஒருகிலோ வெள்ளிப்பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து ஈரோடு தடவியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News