செய்திகள்

காதல் விவகாரம் தெரிந்ததால் மாயமான திருப்பூர் கல்லூரி மாணவர்

Published On 2017-05-24 15:36 IST   |   Update On 2017-05-24 15:36:00 IST
காதல் விவகாரம் தெரிந்ததால் மாயமான திருப்பூர் கல்லூரி மாணவர் மன உளைச்சலில் இருப்பதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.
கோபி:

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் குமார். ரெயில்வேயில் மெக்கானிக்காக உள்ளார். இவரது மகன் சுபாஷ் (வயது 23).

சுபாஷ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படிக்கிறார். இவரது அக்கா வீடு ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ளது.

கடந்த 22-ந் தேதி சுபாஷ் கோபி வந்தார். அதன் பிறகு திருப்பூர் போனவர் வீட்டுக்கு போய் சேரவில்லை. மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

இந்த நிலையில் சுபாஷ் தனது பேஸ்புக்கில், ‘‘நான் தமிழரசி என்ற பெண்ணை காதலித்து வந்தேன். இந்த காதல் விவகாரம் அவரது பெற்றோர் வீட்டுக்கு தெரிந்து விட்டது. இதனால் நான் மன உளைச்சலில் இருக்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

இதை வைத்து பார்க்கும் போது காதல் வி‌ஷயம் தெரிந்து விட்டதால் சுபாஷ் மனம் உடைந்து மாயமாகி விட்டது தெரிய வந்தது.

இது குறித்து அவரது தந்தை குமார் கோபி அருகே உள்ள சிறுவலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.

Similar News