செய்திகள்

பவானிசாகர் நீர்மட்டம் 40 அடியை தொட்டது

Published On 2017-05-24 14:47 IST   |   Update On 2017-05-24 14:47:00 IST
2 நாளில் 30 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 40 அடியை தொட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 120 அடியை கொண்டது. இதில் 15 அடி சேறும்- சகதியும் கொண்டது. மீதி 105 அடியில் தண்ணீரை சேமிக்கலாம்.

வறட்சி காரணமாகவும் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. மேலும் இருக்கும் தண்ணீரை குடிநீருக்காக திறந்து விட்டதாலும் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 30 அடியாக சுருங்கியது.

இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலையில் 2 நாட்களாக கோடை மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் வினாடிக்கு 1433 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நீர் மட்டம் உயர்ந்தது.

இந்த 2 நாளில் 30 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 40 அடியை தொட்டது.

அதே சமயம் இன்று நீர் வரத்து நேற்றை விட குறைந்துள்ளது. நேற்று வினாடிக்கு 1433 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று குறைந்து வினாடிக்கு 628 அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதில் குடிநீருக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 150 கன அடி தண்ணீரும் வாய்க்காலுக்கு 5 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Similar News