பவானி கூடுதுறையில் அண்ணனின் அஸ்தியை கரைக்க வந்த தம்பி தண்ணீரில் மூழ்கி பலி
பவானி:
சேலம் மாவட்டம் ஏற்காடு கண்ணங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). இவரது அண்ணன் நாராயணன் கடந்த வாரம் இறந்துவிட்டார்.
அவரது அஸ்தியை கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடப்பதாக இருந்தது. இதற்காக நாராயணனின் மகன்களுடன்,கிருஷ்ணன் பவானி கூடுதுறைக்கு வந்தார்.
அவர்கள் அஸ்தியை கரைக்க தண்ணீரில் இறங்கினர். அங்கு தண்ணீர் குறைவாக உள்ளதால் அதிக தண்ணீருக்காக அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
அப்போது கிருஷ்ணன் கால் தடுமாறி தண்ணீருக்குள் விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். இதனால் உடன் சென்றவர்கள் சத்தமிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.
ஆனால் கிருஷ்ணனை மீட்க முடியவில்லை. பின்னர் பரிசல்களில் சென்று தேடும் பணி நடந்தது. அப்போது கிருஷ்ணன் பிணமாக மீட் கப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணனின் உடல் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பவானியில் இன்று காலை பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.