செய்திகள்

வேலூர் அருகே தொழிலாளி படுகொலை: முகத்தை எரித்து சுடுகாட்டில் வீச்சு

Published On 2017-05-18 17:40 IST   |   Update On 2017-05-18 17:40:00 IST
வேலூர் அருகே தொழிலாளியை கொலை செய்து முகத்தை எரித்து சுடுகாட்டில் வீசியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் அருகே உள்ள காட்டுபுத்தூர் அல்லிவரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). கூலி தொழிலாளி. சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற அவர் மாயமானார்.

இந்த நிலையில் காட்டுபுத்தூர் சுடுகாட்டில் இன்று காலை சிவக்குமார் இறந்து கிடந்தார். இதுபற்றி வேலூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

சிவக்குமார் உடல் உப்பிபோய் இருந்தது. அவரது முகம் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. அவரது கால்களை நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதனால் காலில் சதைகள் இல்லாமல் எலும்புகள் வெளியே தெரிந்தன.

மர்ம நபர்கள் சிவக்குமாரை கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை எரித்து சுடுகாட்டில் வீசியுள்ளனர்.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான சிவக்குமாருக்கு பவானி என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில் கடந்த திங்கட்கிழமை முதல் சிவக்குமாரை காணவில்லை என தெரிவித்தனர்.

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News