செய்திகள்

கோவையில் ஒரே நாளில் 2 பெண்களிடம் 13 பவுன் செயின் பறிப்பு

Published On 2017-05-18 17:14 IST   |   Update On 2017-05-18 17:14:00 IST
கோவையில் ஒரே நாளில் 2 பெண்களிடம் 13 பவுன் செயினை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சுதர்சன் கார்டனை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ராமாபாய் (வயது 61). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வடவள்ளியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்து இருந்தார். சம்பவத்தன்று இவர் அருகே உள்ள கடைக்கு காய்கறிகள் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்இமைக்கும் நேரத்தில் ராமாபாயின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சியடைந்த ராமாபாய் இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச்சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். கோவை ராமநாதபுரம் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பிருந்தா (58).இவர் திருச்சி ரோட்டில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் துணி தைத்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பிருந்தாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். பிருந்தா தண்ணீர் கொடுத்த போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை அந்த வாலிபர் பறித்தார்.

பின்னர் வெளியே தயாராக இருந்த மற்றொரு வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.இதில் அதிர்ச்சியடைந்த பிருந்தா இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

Similar News