செய்திகள்

விருத்தாலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்

Published On 2017-05-11 16:17 IST   |   Update On 2017-05-11 16:17:00 IST
விருத்தாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையின் தகர கொட்டகையை பெண்கள் ஆவேசத்துடன் அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் அங்கிருந்த மதுபாட்டில்களையும் எடுத்து உடைத்தனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தொரவளூரில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் விருத்தாசலம்-மே.மாத்தூர் சாலையில் கச்சிபெருமாநத்தத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக தகர கொட்டகை அமைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் எதிர்ப்பை மீறி நேற்று அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்றது. இதுபற்றி தகவல் அறிந்த கச்சிபெருமாநத்தம் பகுதியை சேர்ந்த பெண்கள் உருட்டு கட்டைகளுடன் அந்த கடைக்கு திரண்டு வந்தனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையின் தகர கொட்டகையை ஆவேசத்துடன் அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் அங்கிருந்த மதுபாட்டில்களையும் எடுத்து உடைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பி ஓடினர்.

மேலும் விருத்தாசலம்- மே.மாத்தூர் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்தால், கடையை அடித்து நொறுக்குவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News