செய்திகள்

புதுவையில் இருந்து காரில் கடத்திய 444 மது பாட்டில்கள் பறிமுதல்

Published On 2017-05-09 16:02 IST   |   Update On 2017-05-09 16:02:00 IST
புதுச்சேரியில் இருந்து காரில் கடத்திய 444 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:

புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மது கடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலூர் ஆல்பேட்டையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெபஸ்டீன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் சீல் வைக்கப்பட்ட அட்டைப் பெட்டிகள் இருந்தது.

அதை திறந்து பார்த்த போது புதுவையில் இருந்து கடத்தி வரப்பட்ட 444 மதுப்பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த கார் டிரைவர் மணிவண்ணன் (வயது 32), என்பதும் மற்றொருவர் சுந்தரசேகர் (27) என்பதும் தெரிய வந்தது.

சுந்தரசேகர் தனது உறவினருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அதற்கு தேவையான பொருட்களை புதுவையில் இருந்து காரில் எடுத்து வர வேண்டும் என்று கூறி கடலூரில் இருந்து மணிவண்ணனை புதுவைக்கு அழைத்து சென்ற விவரமும் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து காரில் கடத்தி வரப்பட்ட 444 மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை கடத்தி வந்த 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News