செய்திகள்

நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: முத்தரசன்

Published On 2017-05-08 10:52 IST   |   Update On 2017-05-08 10:52:00 IST
தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.
திருவாரூர்:

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து கிடைக்க மத்திய அரசு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். டாக்டர்களின் போராட்டத்தை இடதுசாரி கட்சிகள் நடத்துகிறது என்று பா.ஜனதா கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழக கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.



தமிழகத்தில் இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களில் விவசாயத்துக்காக வண்டல் மண் எடுக்க எவ்வித தடையும் விதிக்க கூடாது.

மன்னார்குடியில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வறட்சி நிவாரணம் கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு-முள்ளுவுக்கு காரணமான வருவாய்த்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லையெனில் போராட்டம் நடத்தப்படும்.

கொடநாடு, சிறுதாவூர், போயஸ் கார்டன் ஆகியவற்றை தமிழக அரசு தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் பினாமி அரசு தான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சர்களில் யார் ஊழல் செய்தாலும் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News