செய்திகள்
கோப்பு படம்

ராதிகாவின் ராடன் நிறுவனத்தில் ரூ.4.97 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக தகவல்

Published On 2017-04-12 22:22 IST   |   Update On 2017-04-12 22:22:00 IST
நடிகை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் ரூ.4.97 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

நடிகை ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் ரூ.4.97 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்த சமயத்தில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு அளித்தார். பிரச்சாரம் செய்ய பணம் வாங்கியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சரத்குமார் வீட்டிலும் சோதனை நடத்தினர். அவரது மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சரத்குமார் மற்றும் ராதிகாவிடம் இன்று வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இன்று இரவு நிறைவடைந்தது.



இந்த விசாரணையில், ராதிகாவின் ராடன் நிறுவனத்தில் ரூ.4.97 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரி ஏய்ப்பு செய்ததை சரத்குமாரும் ராதிகாவும் ஒப்புக்கொண்டதாகவும், வரித் தொகையான 4.97 கோடி ரூபாயை செலுத்துவதாக கூறியதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சரத்குமார் வீட்டில் சோதனை செய்த அதிகாரிகளை மிரட்டியதாக அமைச்சர் கடம்பூர் ராஜு மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பார் கவுன்சிலைச் சேர்ந்த அய்யப்ப மணி மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Similar News