செய்திகள்

ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரி சோதனை

Published On 2017-04-11 09:22 GMT   |   Update On 2017-04-12 03:02 GMT
நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெறு வந்த நிலையில், வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்தன. இதையடுத்து, அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.



பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு  சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆஜரானார்கள். அவர்களிடம் நீண்ட நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில், சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று பிற்பகல் சோதனையைத் தொடங்கினர். சென்னை தி.நகரில் உள்ள ராடன் மீடியா அலுவலகத்தில் இந்த சோதனை நடக்கிறது.



சரத்குமாரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறிய நிலையில், ராதிகாவின் நிறுவனத்தின் தற்போது சோதனை நடக்கிறது. இதேபோல் மேலும் சில பகுதிகளில் சோதனை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சோதனை பற்றிய முழுவிவரங்கள் விரைவில் தெரியவரும்.


Similar News