செய்திகள்

10 பெண்கள் உதவியுடன் பரபரப்பாக நடந்த பண சப்ளை

Published On 2017-04-06 15:52 IST   |   Update On 2017-04-06 15:52:00 IST
ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெளியூர் நிர்வாகிகள் ஒவ்வொரு தெருவிலும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரிடமும் கடந்த வாரமே பணப்பட்டுவாடாவுக்கான முழுத் தொகையும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. சிக்னல் வந்ததும் பணத்தை வாக்காளர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

பணத்தை எப்படி கை மாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு உதவிகள் செய்ய ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த 10 உள்ளூர் பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

பணப்பட்டுவாடாவுக்கு இந்த 10 பெண்களின் பணிதான் முதுகெலும்பாக அமைந்திருந்தது.

ஒவ்வொரு தெருவிலும் முதல் கட்டமாக யார்- யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வீடுகளை அடையாளம் காட்டும் பணியை பெண்கள் குழுவுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

மேலும் பணப்பட்டு வாடா நடக்கும் போது தெருமுனையில் நின்று யாராவது வருகிறார்களா? என்பதை கண்காணிக்கும் மிக முக்கிய வேலையையும் இவர்களே செய்தனர். தேர்தல் பார்வையாளர்களோ, பறக்கும் படையினரோ, போலீஸ்காரர்களோ வந்தால், தங்கள் கையில் வைத்துள்ள கொடியை உயர்த்தி காட்டி அசைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் இப்படி பத்து, பத்து பெண்கள் உதவியுடன் பணப்பட்டுவாடா ஜரூராக நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

Similar News