செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு எடுத்து தங்கி மக்கள் பணியாற்றுவேன்: டி.டி.வி. தினகரன்

Published On 2017-03-25 09:29 GMT   |   Update On 2017-03-25 09:29 GMT
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வீடு எடுத்து தங்கி மக்கள் பணியாற்றுவேன் என்று அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார்.

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் ‘அ.தி.மு.க. அம்மா’ கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேதாஜி நகரில் 1, 2, 3வது தெருவில் அவர் ஆதரவு திரட்டினார். செல்லும் இடமெல்லாம் அவரை மக்கள் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். மக்கள் மத்தியில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

இந்த தொகுதி மக்களின் தேவையை, பிரச்சினையை நான் நன்கு அறிந்துள்ளேன். அவற்றையெல்லாம் தீர்க்க எனக்கு ‘தொப்பி’ சின்னத்தில் வாக்களித்து அமோக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

புரட்சித்தலைவி அம்மா இந்த தொகுதிக்கு 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் 4 ஆண்டுகள் நம்முடைய அரசின் மூலம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி இத்தொகுதியை இந்தியாவிலேயே முதன்மை தொகுதியாக, மாதிரி தொகுதியாக மாற்றுவேன்.

அதற்காக இந்த தொகுதியிலேயே வீடு எடுத்து தங்கி பணியாற்றுவேன்.

இந்த தேர்தலில் துரோகிகள், எதிரிகளுடன் சேர்ந்து செயல்படுவதால் இரட்டை இலையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. மீண்டும் இரட்டை இலையை மீட்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, எம்.சி. சம்பத், மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ., பாலகங்கா, வெங்கடேஷ் பாபு எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News