செய்திகள்

இரட்டை இலை சின்னம் மோடியின் கையில் உள்ளதா: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2017-03-17 22:49 GMT   |   Update On 2017-03-17 22:49 GMT
இரட்டை இலை சின்னம் மோடியின் கையில் உள்ளதாக சில தலைவர்கள் பேசி வருகின்றனர். பாரதிய ஜனதாவுக்கு தாமரை சின்னமே போதும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட்டில் மக்களுக்கு பயன்தரும் எந்த திட்டங்களும் இல்லை. தமிழகத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்று ஆட்சியாளர்கள் குறை கூறுகின்றனர். ஆனால் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயை முறையாக வசூலிப்பதற்கும், வருவாயை அதிகரித்துக்கொள்வதற்கும் எந்தவிதமான நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

மத்திய அரசை பொறுத்தவரையில் தமிழகத்துக்கு முறைப்படி கொடுக்க வேண்டிய நிதியை எந்தவித குறைபாடும் இன்றி சரியான அளவில் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுமத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என சிலர் திசை திருப்புகின்றனர். ஆனால் மாநில அரசு பலவீனமான அரசாக, பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருப்பதால்தான் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்கள் பிரச்சினைகளில் தீர்வு காண மாநில அரசு வேகமாக செயல்படவேண்டும்.



ஆர்.கே.நகர் தொகுதியில் தகுதியான வேட்பாளரை பாரதிய  ஜனதா கட்சி நிறுத்த உள்ளது. இதற்காக 3 வேட்பாளர்களின் பெயர்கள் அகில இந்திய தலைமைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

இரட்டை இலை சின்னம் மோடியின் கையில் உள்ளது என்று சில தலைவர்கள் பேசி வருகின்றனர். பாரதிய ஜனதாவிடம் வெற்றிச்சின்னமான தாமரை சின்னம் உள்ளது. அதுவே எங்களுக்கு போதுமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News