செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு

Published On 2017-03-17 11:54 GMT   |   Update On 2017-03-17 11:54 GMT
கடலூர் மாவட்டத்தில் கிராமபகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களில் திடீரென்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கடலூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டத்துக்குட்பட்ட கடலூர் மண்டலத்தில் 11 பணிமனைகள் உள்ளன.

அங்கிருந்து 700 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களில் குறைந்த பட்சமாக ரூ.3 மற்றும் ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

நேற்று இந்த குறைந்தபட்ச கட்டணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. கிராம பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கண்டக்டர்களிடம் பயணிகள் கேட்டபோது அதிகாரிகள் கூறியதால் குறைந்தபட்ச கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கிறோம். மற்ற விவரங்கள் வேண்டுமானால் அதிகாரிகளிடம் கேளுங்கள் என்று தெரிவித்தனர்.

இதனால் அவர்களிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பாதிவழியிலேயே பயணிகளை கண்டக்டர்கள் இறக்கி விட்டு சென்றனர்.

கடலூர் மாவட்டத்தில் சாதாரண கட்டண பஸ்கள் அதிகமான இயங்கின. இந்த பஸ்கள் எக்ஸ்பிரஸ் மற்றும் பைபாஸ் ரைடர் என்று தற்போது தரம் பிரிக்கப்பட்டுள்ளது.

பஸ்களில் அதற்கான போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் குறிப்பிட்ட இடங்களில்தான் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் அந்த பஸ்களில் பயணிகளிடம் ரூ.2 முதல் ரூ.3 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

இவ்வாறு பஸ்களில் திடீரென்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.3 மற்றும் 4 ரூபாய் முன்பு வசூலிக்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு குறைந்த அளவு காசே நாங்கள் எடுத்து வருவோம்.

ஆனால் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி ஏற்கனவே இருந்த குறைந்த பட்ச கட்டணத்தை ரத்து செய்து விட்டு குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாய் என்று திடீரென்று வசூலிக்கிறார்கள்.

சாதாரண பஸ்களையும் பைபாஸ் ரைடர் மற்றும் எக்ஸ்பிரஸ் என்று பிரித்து அந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த கட்டணம் உயர்வு குறித்து முன்கூட்டியே தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. மறைமுகமாக பஸ்களில் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

இதுகுறித்து காரணம் கேட்டால் பஸ் கண்டக்டர்கள் சரியான பதில் கூற மறுக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததையொட்டி அரசு பஸ்களில் மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதற்கு சரியான பதில் தரப்படவில்லை.

கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஏராளமாக ஓடுகின்றன. அவைகளால் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

Similar News