செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தி தொடர் ஓட்டம்: தேனி போலீஸ்காரர் அறிவிப்பு

Published On 2017-03-17 05:13 GMT   |   Update On 2017-03-17 05:13 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி தொடர் ஓட்டம் நடத்தப்போவதாக தேனி போலீஸ்காரர் அறிவித்து உள்ளார்.

தேனி:

தேனி அருகே ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தவர் வேல்முருகன் (வயது45). ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பாதுகாப்பு படையில் பணிபுரிந்தார்.

கடந்த 2003-ல் 81 நாட்கள் 3,600 கி.மீ. ஓடி சாதனை, நீச்சல் சாதனை என ஜெயலலிதாவின் அன்பை பெற்றார். இதற்காக அவரிடம் இருந்து பரிசு பெற்றவர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது உண்ணாவிரதம் இருந்தார். விடுதலையான பிறகு மொட்டை போட்டுக் கொண்டார்.

சசிகலா முதல்வர் பதவி ஏற்றால் ஜெயலலிதா நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அறிவித்தார். இதனால் சமீபத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தொடர் ஓட்டம் நடத்த உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-


மார்ச் 19-ந் தேதி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி 490 கி.மீ. ஓடி ஜெயலலிதா நினைவிடம் சென்றடைவேன்.

வழியில் மக்களை சந்தித்து கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போரிடம் கையெழுத்து பெறுவேன். கோரிக்கை மனுவை கவர்னரிடம் ஒப்படைப்பேன்.

ஆர்.கே.நகர். தொகுதி மக்களை சந்தித்து ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள் என கேட்பேன்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட தகுதியற்றவர். அரசுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் செலுத்தாமல் இழுத்தடிக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடக்கும் என அறிவித்து விட்டு அவர் ஓட்டு கேட்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News