செய்திகள்

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஏப்.1 முதல் ஆதார், பான்கார்டு கட்டாயம்

Published On 2017-03-15 07:49 GMT   |   Update On 2017-03-15 07:49 GMT
ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார், பான்கார்டு மற்றும் செல்போன் எண் கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னை:

மத்திய- மாநில அரசுகளின் நல உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. ரே‌ஷன் கடை, கியாஸ் ஏஜென்சி வங்கி என படிப்படியாக அனைத்து துறைகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் விவரங்களை ஆதார் எண் மூலம் இணைப்பதால் அரசின் உதவிகள் எளிதாக வழங்குவதோடு அதனை முறைப்படுத்தவும் உதவுகிறது.

போக்குவரத்து துறையில் தற்போது ஆதார் எண், பான்கார்டு, செல்போன் எண் ஆகியவை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



புதிய இருசக்கர வாகனம், கார் போன்றவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு இது வரையில் இருப்பிட சான்றாக ரே‌ஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆதார் அட்டை, பான் அட்டை, செல்போன் எண் போன்ற ஆவணங்களை வழங்கினால் மட்டுமே புதிய வாகனங்களை பதிவு செய்ய முடியும்.

இது குறித்து போக்குவரத்து துறை ஆணையாளர் தயானந்த் கட்டாரியா அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில் வாகனங்கள் பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதால் போலி பதிவு வாகனங்கள், விபத்து ஏற்படுத்தி தப்பி செல்லும் வாகனங்கள், சாலைவரி, தரச்சான்று பெறாத வாகனங்கள் போன்றவற்றை எளிதாக கண்டு பிடிக்க முடியும். பல்வேறு தவறுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண இத்திட்டம் உதவியாக இருக்கும் என்றார்.

Similar News