செய்திகள்
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணக்குடி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அமல் ஆண்ட்ரோஸ்(34) இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை டவுனுக்கு வந்துவிட்டு தருமபுரம் சாலை எல்.பி.நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கியதில் தடுமாறி கீழேவிழுந்துள்ளார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மயிலாடுதுறை அரசுஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.