செய்திகள்

உத்திரமேரூரில் மோட்டார் சைக்கிளால் மோதி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் கொள்ளை

Published On 2017-03-02 15:56 IST   |   Update On 2017-03-02 15:56:00 IST
உத்திரமேரூரில் மோட்டார் சைக்கிளால் மோதி வியாபாரியை தாக்கி ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

உத்திரமேரூர் வாழைத்தோட்ட தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். இவர் உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் உரக்கடை வைத்து உள்ளார்.

நேற்று இரவு அவர் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். கையில் விற்பனை பணம் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்தை வைத்து இருந்தார்.

இரவு 10 மணி அளவில் மி‌ஷன் பள்ளி தெரு வழியாக சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென வேலாயுதம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.

இதில் நிலை குலைந்த வேலாயுதம் வண்டியுடன் கீழே விழுந்தார். உடனே மர்ம கும்பல், அவரிடம் இருந்த பணப்பையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். கொள்ளை கும்பலின் இந்த திடீர் தாக்குதலில் வேலாயுதத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலாயுதம் கடையை மூடிவிட்டு தினமும் பணத்துடன் வீடு திரும்புவதை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ஆசாமிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

உத்திரமேரூரில் கடந்த 3 மாதத்தில் இதேபோல் வியாபாரிகளை வழிமறித்து 4 சம்பவம் நடந்து உள்ளது. குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை. தொடர் வழிப்பறியால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

Similar News