செய்திகள்

சிவகங்கை அருகே, காதலிக்க வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி: 2 வாலிபர்கள் கைது

Published On 2017-02-18 15:41 IST   |   Update On 2017-02-18 15:41:00 IST
காதலிக்குமாறு வற்புறுத்தியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை:

சிவகங்கை தாலுகா மேலச்சாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவரது மகள் பாலசுந்தரி (வயது 21). சிவகங்கை அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்தவர் மகாராஜா (24). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, ஊருக்கு வந்துள்ளார். இவர், பாலசுந்தரியை பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த கல்லூரி மாணவி, அரளி விதையை (வி‌ஷம்) அரைத்து குடித்து தற் கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து பாலசுந்தரி சிவகங்கை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மகாராஜா மற்றும் அவரது நண்பர்களான கணேசன், ராமச்சந்திரன் (25), ரஜினி (29), விசு (25) ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில், மகாராஜா, ரஜினி இருவரும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதேபோன்று சிவகங்கை தாலுகா பொன்னாகுளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு அதே ஊரை சேர்ந்த செந்தில்முருகன் (27) என்பவர் காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுபற்றி அந்த மாணவி, சிவகங்கை போலீஸ் டி.எஸ்.பி. மங்களேசுவரனிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்முருகனை கைது செய்தனர்.

இவரும் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News