சிவகங்கை அருகே விபத்து: 4 பேர் படுகாயம்
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா நாட்டரசன் கோட்டை விலக்கு ரோட்டில், கரும்பு சக்கைகள் ஏற்றி வந்த ஒரு லாரி, இன்று காலை அங்குள்ள பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு மெயின்ரோட்டில் திரும்பியது.
அப்போது அந்த வழியாக 10-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த மினிவேன் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் வேனின் கதவு இடி பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக தொண்டி- மதுரை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.