செய்திகள்

6-ம் வகுப்பு மாணவியை 3 மாதங்களாக மிரட்டி கற்பழித்த முதியவர் கைது

Published On 2017-02-10 10:32 GMT   |   Update On 2017-02-10 10:32 GMT
வாலாஜாவில் பெற்றோரை இழந்த 6-ம் வகுப்பு மாணவியை 3 மாதங்களாக மிரட்டி கற்பழித்த முதியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த வன்னி வேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காதர் பாஷா (வயது 63). இவரது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 12 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவியின் பெற்றோர் இறந்து விட்டனர். அண்ணன் அரவணைப்பில் உள்ளார். இந்த நிலையில், மாணவிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அண்ணன் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி பரிந்துரை செய்தனர். அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதனையில், மாணவி பலமுறை கற்பழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர்.

விசாரணையில் மாணவி பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவி வீட்டில் தனியாக இருந்தார்.

இதையறிந்த, முதியவர் காதர்பாஷா மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். மாணவியை மிரட்டி கற்பழித்துள்ளார். யாரிடமாவது கூறினால் ஒழித்திடுவேன் என காதர்பாஷா எச்சரித்து உள்ளார்.

அச்சமடைந்த மாணவி, இதுப்பற்றி யாரிடமும் கூறவில்லை. இது முதியவர் காதர்பாஷாவுக்கு சாதகமாக அமைந்தது. அப்போதில் இருந்து சுமார் 3 மாதங்களாக மாணவியை மிரட்டி கற்பழித்து சீரழித்துள்ளார். சமீபத்தில் மீண்டும் கற்பழிக்கப்பட்டதில் மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் அண்ணன், வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து முதியவர் காதர்பாஷாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் வாலாஜாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News