செய்திகள்

தொண்டர்கள் குவிந்து வருவதால் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2017-02-10 07:50 GMT   |   Update On 2017-02-10 07:50 GMT
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு தொண்டர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டுக்கு தொண்டர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கட்சியினரும் பொதுமக்களும் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரும் கண்டு கொள்ளாமலேயே இருந்தனர்.

இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அழைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்குமாறு கூறினார். இதையடுத்து இன்று அவரது வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. நுழைவு வாசலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். வீட்டின் முன்பு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் நிற்பதற்கு தனித்தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க செல்வதற்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அமருவதற்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாக திரளுவதால் ஆதரவு தெரிவிக்க வருபவர்கள் மற்றும் பன்னீர்செல்வத்தின் பேட்டி ஆகியவற்றை பார்ப்பதற்கு வசதியாக 3 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலி பெருக்கி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆங்காங்கே குடிதண்ணீர் கேன்களும் வைக்கப்பட்டுள்ளன.

Similar News