செய்திகள்

இளம்பெண்ணை ஆபாசமாக விமர்சித்து போஸ்டர் ஒட்டியவருக்கு ஒரு ஆண்டு ஜெயில்

Published On 2017-02-03 12:08 IST   |   Update On 2017-02-03 12:08:00 IST
திருமணம் செய்து வைக்காததால் இளம்பெண்ணை ஆபாசமாக விமர்சித்து போஸ்டர் ஒட்டியவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருக்கழுக்குன்றம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மாமல்லபுரம்:

சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் கந்தன். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு மாமல்லபுரத்தை அடுத்த புதிய கல்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கேட்டார்.

ஆனால் பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தன், இளம்பெண் குறித்தும் அவரது குடும்பத்தாரையும் பற்றியும் ஆபாசமாக விமர்சித்து நோட்டீஸ் அச்சடித்து வீடுவீடாக போட்டார். மேலும் முக்கிய வீதிகளிலும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது குறித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கந்தனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருக்கழுகுன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.அதில், ‘‘பெண்களை மிரட்டும் வகையில் அவர்களை இழிவுபடுத்துவதுடன் சட்டம் ஒழுங்குக்கு பயமின்றி ஆபாச வார்த்தையுடன் போஸ்டர்களை ஒட்டி பெண்களை இழிவு படுத்திய குற்றத்துக்காக குற்றவாளி கந்தனுக்கு ஓராண்டு சிறை தண்டணையும், 3ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து கந்தனை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

Similar News