செய்திகள்

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆய்வு: கலெக்டர் தகவல்

Published On 2017-01-31 12:33 IST   |   Update On 2017-01-31 12:33:00 IST
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இடத்தினை ஆய்வு செய்து அரசுக்கு கருத்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி பேசியதாவது:-

மாவட்டத்தில் விவசாயிகளின் நலனைகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளபட்டு வருகிறது. பொதுபணித்துறை மூலம் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தி அதிகளவில் தண்ணீரை சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றது.

மாவட்டத்தில் 3 லட்சம் நாட்டு மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இதனை 6 லட்சமாக உயர்த்தி மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இடத்தினை ஆய்வு செய்து அரசுக்கு கருத்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு பயிர்கடன் மற்றும் நகை கடன் வழங்கும் போது உச்சவரம்பின்றி ரொக்கமாக வழங்க அனுமதிஅளிக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Similar News