செய்திகள்

சென்னை மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-01-30 06:37 GMT   |   Update On 2017-01-30 06:37 GMT
சொத்து ஆவணங்களை முறையாக பராமரிக்காமல் நுகர்வோரை அலைக்கழித்ததற்காக சென்னை மாநகராட்சிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை பிராட்வே கோழிக்கடை மார்க்கெட் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு சொத்தை என்.கே.பலராமன் என்பவரிடம் இருந்து 1992-ல் வாங்கினார்.

வாங்கிய சொத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி வருவாய் துறைக்கு விண்ணப்பித்தார். ஆனால் வருவாய்துறை அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை.

கிருஷ்ணன் பெயருக்கு சொத்தை மாற்றி தராமல் இழுத்தடித்ததால் அவர் வடசென்னை நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-

நான் 1992-ல் ஸ்ரீராமுலு என்பவரிடம் இருந்து வாங்கிய சொத்தை எனது பெயருக்கு மாற்றம் செய்ய உரிய ஆவணங்களுடன் வருவாய் துறைக்கு விண்ணப்பித்தேன். ஆனால் கொடுத்த விண்ணப்பத்தினை பார்க்காமல் ஸ்ரீராமுலு என்பவர் பெயரில் சொத்து வரி பில் வழங்கப்பட்டது.

மேலும் இந்த இடம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அவர்களிடம் இருந்து தடையின்மை சான்று வாங்கி தந்தால்தான் என் பெயருக்கு மாற்றம் செய்ய முடியும் என்று கூறி விட்டனர்.

அதே நேரத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு என் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரு வாய்த்துறையினர் சொத்து ஆவணங்களை முறையாக பராமரிக்காமல் என்னை இழுத்தடிக்கின்றனர்.

என் பெயருக்கு சொத்து வரி செலுத்த ஆவணத்தில் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து நுகர்வோர் தீர்ப்பாணைய தலைவர் கே.விஜயபாலன் மற்றும் உறுப்பினர் கலையரசி வழங்கிய உத்தரவில் கூறியிருப்பதாவது:-

குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி கிருஷ்ணன் பெயருக்கு மாற்றம் செய்து பில் வழங்கப்படும்போது சொத்து வரிக்கான பெயர் மாற்றம் செய்யாமல் இருப்பது ஏன்?

சொத்து ஆவணங்களை முறையாக பராமரிக்காமல் நுகர்வோரை அலைக்கழித்ததற்காக ரூ.10 ஆயிரம் சென்னை மாநகராட்சி வருவாய் அதிகாரி கிருஷ்ணனுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் கிருஷ்ணன் பெயரில் சொத்து ஆவணங்களை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Similar News