செய்திகள்

நூலகத்துறை இயக்குனர் பதவியை நிரப்பக் கோரி வழக்கு

Published On 2017-01-30 02:50 GMT   |   Update On 2017-01-30 02:50 GMT
2012-ம் ஆண்டு முதல் காலியாக இருக்கும் நூலகத்துறை இயக்குனர் பதவியை நிரப்பக் கோரி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளர்கள் கழகத்தின் தலைவர் எம்.ராஜேஷ்குமார். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பொது நூலகத்துறையின் இயக்குனர் பதவி கடந்த 2012-ம் ஆண்டு முதல் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் முன்பு நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இயக்குனர் பதவிக்கு தகுந்த நபரை நியமிக்கவேண்டும் என்றும், அதற்காக புதிய விதிகளை உருவாக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு, தற்காலிக புதிய விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டது. அதன்படி, இயக்குனர் பதவிக்கு, பதவி உயர்வின் அடிப்படையில் தகுந்த நபர் கிடைக்கவில்லை என்றால் நேரடி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பின்னரும் இந்த இயக்குனர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. எனவே, நூலகத்துறை இயக்குனர் பதவியை நிரப்ப அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 

Similar News