செய்திகள்

திருப்பத்தூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2017-01-25 15:15 IST   |   Update On 2017-01-25 15:15:00 IST
திருப்பத்தூர் அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள காக்கணாம்பாளையத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் ரஞ்சிதா (வயது 21). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டார்.

ஆனால் பெற்றோர் வாங்கி கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ரஞ்சிதா மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று அவர் திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் ரஞ்சிதா பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்து பெற்றோரும் உறவினர்களும் அங்கு கூடினர்.

இது பற்றி குருசிலாப்பட்டு போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ரஞ்சிதாவின் உடலை மீட்டனர். உடலை பார்த்து ரஞ்சிதாவின் பெற்றோர் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

போலீஸ் விசாரணையில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் மனம் உடைந்த ரஞ்சிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News