செய்திகள்

விருத்தாசலம் அருகே உளுந்து பயிர்கள் கருகியதால் மனவேதனை - விவசாயி தற்கொலை

Published On 2017-01-24 17:06 IST   |   Update On 2017-01-24 17:06:00 IST
விருத்தாசலம் அருகே உளுந்துபயிர்கள் கருகியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
விருத்தாசலம்:

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் விவசாய பயிர்கள் கருகின. இதனால் மனவேதனை அடைந்த விவசாயிகள் தற்கொலை செய்வது நீடித்து வருகிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கோபுராபுரத்தைச் சேர்ந்த விவசாயி வேல்முருகன் (வயது 45). இவர் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் உளுந்து பயிரிட்டிருந்தார். இதற்காக சிலரிடம் கடன் வாங்கியிருந்தார்.

மழை சரிவர பெய்யாததால் உளுந்து பயிர்கள் கருகின. கடன் வாங்கி பயிர்செய்த பயிர்கள் கருகி விட்டதே. இனிமேல் கடனை எப்படி அடைப்பது என்று வேல்முருகன் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட வேல்முருகனுக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Similar News