செய்திகள்

கொலை வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

Published On 2017-01-09 20:53 IST   |   Update On 2017-01-09 20:53:00 IST
ஜெயங்கொண்டம் அருகே கொலை வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40). இவர் நேற்று ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உள்ள ஒரு கடையில் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது, அங்கு வந்து ஒருவர் மீது இடித்துவிடவே, அவர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சின்னதுரை ஜெயங்கொண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து கடைவீதியில் சுற்றித்திரிந்த அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை, மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சேகர் (33) என்பது தெரியவந்தது. கடந்த 2001-ம் ஆண்டு நிலப்பிரச்சினை சம்பந்தமாக சேகர், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, அண்ணன் மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அதே ஊரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் கணேசன் என்பவரை வெட்டி கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சேகர் உள்பட 3 பேருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சேகர் கடந்த 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சேகரை கைது செய்தனர்.

Similar News