செய்திகள்

சிவகங்கையில் இன்று காலை தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

Published On 2017-01-04 10:59 IST   |   Update On 2017-01-04 10:59:00 IST
சிவகங்கையில் இன்று காலை தி.மு.க. பிரமுகரை காரில் வந்த 10 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் சரவணராஜன் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தி.மு.க. 3-வது வார்டு பிரதிநிதியாகவும் உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இன்று காலை தனது 2 குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக சரவணராஜன் காரில் சென்றுள்ளார். மதுரை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகளை விட்டு, விட்டு அவர் வீட்டிற்கு புறப்பட்டார்.

அந்த பகுதியில் சிறிது தூரம் வந்த போது, கார் மீது ஒரு கல் விழுந்துள்ளது. இதனால் காரை நிறுத்திய சரவணராஜன் கீழே இறங்கி பார்த்தார்.

அப்போது அங்கு வேகமாக ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 10 பேர் கும்பல் சரவண ராஜனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் சுதாரித்த மக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சரவணராஜனை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கபட்டபோது, 3-வது வார்டில் போட்டியிட தி.மு.க. சார்பில் சரவண ராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இது சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் தேர்தல் முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News