செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2017-01-02 11:37 IST   |   Update On 2017-01-02 11:37:00 IST
ஜெயங்கொண்டம் அருகே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் பாலமுருகன். (வயது 28) துபாயில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இவருக்கும் தா.பழூர் கீழத்தெருவைச் சேர்ந்த பிரியா (24) என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி திருமணம் நடை பெற்றது. இதையடுத்து மீண்டும் வெளிநாட்டிற்கு செல்வதற்காக பாலமுருகன் முயற்சி செய்துள்ளார்.

அப்போது அவருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் சிங்கப்பூர் செல்வதற்கான பணிகளை செய்து வந்தார். இது குறித்து மனைவி பிரியாவிற்கு தெரிய வந்தது. திருமணமாகி ஒரு மாதங்களிலேயே தன்னை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு பாலமுருகன் தனக்கு கடன் அதிகமாக உள்ளதாகவும், எனவே வெளிநாட்டிற்கு வேலை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து அறிந்த விக்ரமங்கலம் போலீசார் விரைந்து சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறு தகராறு பிரியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியாவிற்கு திருமணமாகி 29 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. திருமணமாகி 29 நாட்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News