செய்திகள்

திருமணமான ஒரு மாதத்தில் கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு புதுப்பெண் மாயம்

Published On 2016-12-30 09:50 GMT   |   Update On 2016-12-30 09:56 GMT
திருமணமான 1 மாதத்தில் இளம்பெண் தாலியை கழற்றி கணவரிடம் கொடுத்து விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவினாசி:

அவினாசியை அடுத்த கருவலூர் மேற்கு ரத வீதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் லட்சுமணன் (வயது29). டெய்லர்.

இவருக்கும் அவினாசியை அடுத்து பாப்பாங்குளத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகள் சுமதி என்ற லட்சுமி (22) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் புதுமணத்தம்பதி வெளியூர் சென்று விட்டு ஊருக்கு செல்வதற்காக அவினாசி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது லட்சுமி தனது கழுத்தில் இருந்த தாலியை கழற்றி கணவரிடம் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த லட்சுமணன் என்னவென்று கேட்க முயன்றார். இதோ வந்து விடுகிறேன் என்று லட்சுமி கூறிச்சென்றார். திடீரென மாயமான மனைவியை லட்சுமணன் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

மனைவி மாயமானது குறித்து அவரது தாய் வீட்டில் தெரிவித்து அங்கும் தேடிப்பார்த்தார். ஆனால் லட்சுமி கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு செய்த போலீசார் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்ததால் தாலியை கழற்றி கொடுத்து விட்டு சென்றாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான 1 மாதத்தில் இளம்பெண் தாலியை கழற்றி கணவரிடம் கொடுத்து விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News