செய்திகள்

தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்

Published On 2016-12-19 12:28 GMT   |   Update On 2016-12-19 12:28 GMT
தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தேனி:

தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ஹேமா. கடந்த 2014-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. 35 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.

திருமணமான சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட்ட போது ஆத்திரமடைந்த வேல்முருகன் நாற்காலியால் ஹேமாவை தாக்கினார்.

தலையில் பலத்த காயமடைந்த அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

அரண்மனைப்புதூர் முல்லைநகரில் உள்ள பெற்றோர் அழகரி, சின்னத்தாய் ஆகியோர் மகளை ஆஸ்பத்திரியில் சேர்த்து குணப்படுத்தினர். அதன்பின்னர் ஹேமாவின் தாய் சின்னத்தாய் மருமகன் வீட்டுக்கு சென்று ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டார்.

அப்போது வேல்முருகன் நான் 2-வது திருமணம் செய்து விட்டேன். உங்கள் மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ரூ.5லட்சம் வரதட்சணை தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு சின்னத்தாய் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சின்னத்தாய் மகள் ஹேமாவுடன் தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வேல்முருகன், அவரது 2-வது மனைவி ஈஸ்வரி, தாய் சிட்டு, மற்றும் உறவினர்கள் உள்பட 17 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News