செய்திகள்

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி

Published On 2016-12-17 10:26 IST   |   Update On 2016-12-17 10:26:00 IST
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி இன்று (சனிக்கிழமை) இரவு நடக்கிறது.
கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ் பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலியும் நடக்கிறது.

சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிக்கு மேலமணக்குடி இணை பங்கு தந்தை அருட்பணியாளர் ஜான்பெனிட்டோ தலைமை தாங்குகிறார். மாலை 6.30 மணிக்கு செபமாலையும், மாலை ஆராதனையும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர்பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். அமராவதிவிளை பங்குத் தந்தை அருட்பணியாளர் ஜோசப்ரொமால்டு மறையுரை ஆற்றுகிறார்.

இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 6 மணிக்கு நடைபெறும் பெருவிழா நிறைவு திருப்பலிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெரோமியஸ் தலைமை தாங்குகிறார், ஆற்றுப்படுத்துதல் பணிக்குழு இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன் மறையுரை ஆற்றுகிறார். 8 மணிக்கு ஆங்கிலத் திருப்பலி நடக்கிறது.

நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி காசாகிளாரட் அருட்பணியாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். பின்னர் 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. 10.30 மணிக்கு நடைபெறும் மலையாள திருப்பலிக்கு திருவனந்தபுரம் உயர் மறை மாவட்ட நீதித் துறை ஆயர் பதிலாள் அருட்பணியாளர் கிளாடின் தலைமை தாங்குகிறார். பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடக்கிறது.

மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கமும் நற்கருணை ஆசீரும், இரவு 10.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு தந்தை நசரேன், பங்குப்பேரவை துணைத்தலைவர் லியோன், செயலாளர் சேவியர்அமலதாஸ், பொருளாளர் மரியஜாண் மற்றும் பங்குமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், பங்கு அருட் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Similar News