செய்திகள்
குழந்தையை ஆட்டோவில் வீசி சென்ற பெற்றோர்.

2-வதாக பிறந்த ஆண் குழந்தையை அவமானத்தில் வீசி சென்ற தாய்

Published On 2016-12-15 11:21 GMT   |   Update On 2016-12-15 11:21 GMT
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் 2-வதாக பிறந்த ஆண் குழந்தையை ஆட்டோவில் வீசி சென்ற பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா எடத்தலை அல்அமீன் நகர் பகுதியில் நேற்று ஒரு ஆட்டோவில் பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தது.

அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் குழந்தையை மீட்டு களம்பச்சேரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் இது குறித்து எடத்தலை போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர்.

ஆட்டோ நின்ற பகுதியில் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த பெண்களின் விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது இதே பகுதியை சேர்ந்தவர் செபிக் (வயது 30). இவரது மனைவி சிலிஜன் (27). இவர்களுக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. அதன்பின்னர் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதுபோன்று சந்தேகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

இதனையடுத்து அவர்களை போலீசார் தேடினர். சிலிஜன் கணவருடன் தனது தந்தை வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. போலீசார் அவரது தந்தை வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த சிலிஜனிடம் விசாரணை நடத்தினர். எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்று சிலிஜா மறுத்தார்.

சந்தேகமடைந்த போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிலிஜனைவும் இவரது கணவர் செபிக்கையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கடந்த வருடம் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தொடர்ந்து கர்ப்பமானேன். இது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்று கர்ப்பத்தை மறைத்து வந்தேன்.

சம்பவத்தன்று குழந்தை பிறந்தது. அதனை என்ன செய்வது என்று புரியாமல் ஆட்டோவில் வீசினேன் என்றார். இதனையடுத்து கணவன்- மனைவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தம்பதியை 15 நாள் காவலில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.

Similar News