செய்திகள்

ஜெருசலேம் புனித பயணம் செல்ல விண்ணப்பம் அனுப்பலாம்: கலெக்டர் தகவல்

Published On 2016-11-30 22:55 IST   |   Update On 2016-11-30 22:55:00 IST
ஜெருசலேம் செல்ல விருப்பம் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவு கிறிஸ்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.

2016-17-ம் ஆண்டுக்கான ஜெருசலேம் செல்ல விருப்பம் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவு கிறிஸ்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவராக இருக்க வேண்டும். 1.1.2017-ந் தேதி ஒரு ஆண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் உடையவராக இருக்க வேண்டும். வெளிநாடு செல்ல எந்த வில்லங்கமும் இருக்க கூடாது. மருத்துவம் மற்றும் உடல் தகுதி இருக்க வேண்டும்.

அரசு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும். மீதி தொகை தாங்கள் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏற்கனவே இந்த திட்டத்தில் ஜெருசலேம் சென்றிருக்க கூடாது.

ஒரே குடும்பத்தில் 4 பேர் பயணம் செய்யலாம். 2 வயதுடைய 2 குழந்தைகள் இருக்கலாம். 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாவட்ட வாரியாக கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அரசு தேர்வு செய்யப்பட்ட முகவர் மூலமே இந்த புனித பயணம் மேற் கொள்ள வேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிள்ளார்.

Similar News