செய்திகள்

நன்னிலம் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது

Published On 2016-11-25 11:36 GMT   |   Update On 2016-11-25 11:37 GMT
நடத்தையில் சந்தேகப் பட்டு 5 குழந்தைகளின் தாயான பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேரளம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள குவளைக்கால் ஊராட்சி கோவில் நங்கையை சேர்ந்தவர் சிவக்குமார் விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (வயது 35). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சிவக்குமாருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சிவக்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சித்ரா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட சிவக்குமார் தலைமறைவாகி விட்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நன்னிலம் டி.எஸ்.பி.அறிவானந்தம், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சித்ரா உடலை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிவக்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகப்பட்டு 5 குழந்தைகளின் தாயான பெண்ணை கணவரே கொலை செய்த சம்பவம் நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News