கடன் வாங்கியவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் விவசாயி தற்கொலை
ஈரோடு:
சத்தியமங்கலத்தை அடுத்த பங்களாபுதூர் அருகே உள்ள புஞ்சை துறையம் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 54).
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தார்.
இவர் தான் சம்பாதித்த பணத்தை பலருக்கு கடன் கொடுத்து உள்ளார். ஆனால் அவர்கள் கடன் வாங்கி பல நாட்களாகியும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது,
இதனால் பெரியசாமி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கடன் வாங்கியவர்கள் திருப்பி கொடுக்க மறுக்கிறார்களே என்று மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் தோட்டத்தில் உள்ள வீட்டின் முன்புறம் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பங்களா புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட விவசாயி பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.